நீராடச் சென்ற இருவர் பலி
மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நீரில் மூழ்கியிருந்தனர்.
வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞன் சடலமாக நேற்று மாலை மீட்கப்பட்டதுடன், அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நண்பர்களுடன் உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற சம்பவ தினமான நேற்று மாலை அந்தப் பகுதியில் உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு குளத்தில் நீராடியபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்.
உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.