கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார். இவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மயிலடுத்துறை பகுதியில் ஒரு தரப்பினர் அத்துமீறி கூடாரமிட்டுள்ளார்கள். இச்செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்.
எனினும் இவர்களை மீண்டும் அழைத்து வருவதில்லை என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னர் வழக்கை மீளப் பெற்றோம். ஆனால் தற்போது மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை. இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாக செயற்படவில்லை.
நாட்டில் விவசாயம் பால் உற்பத்தி வீழ்ச்சி
நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது.
பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
ஆகவே இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு” சிறிலங்கா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது உரையாற்றிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர,
இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம்.
“இவ்விடயத்தில் உணர்வு பூர்வமாகவும், பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
சேதன பசளை உற்பத்தி
அதன் போது உத்தியோகப்பூர்வமான அறிவிப்பின் ஒரு பிரதியை எனக்கும் தாருங்கள் அதனை மாவட்ட செயலாருக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சேதன பசளை உற்பத்தி என ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலப்பரப்பு அரசியல் தரப்பினரின் இணக்கமானவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.