சந்திரிக்கா சூளுரை
மோசடிகள், கொள்ளை மற்றும் வன்முறைகளில் ஈடுபடாத நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய இளைய தலைவர்
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாகவும் அவர் தமது குடும்பத்திலிருந்து வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றும் தெரிவித்துள்ள அவர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனகல்ல பிரதேசத்தில் சிறந்த கல்வி அறிவு கொண்ட தேவையான அளவு இளைஞர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘எமக்கு நாட்டை நிர்வகிக்கும் வகையில் வயது கிடையாது. நாம் வயது முதிர்ந்தவர்களாகிவிட்டோம்’ என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, திருகோணமலை ஆனந்த அமரபுர மகாபீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டுள்ளார்.