இலங்கையிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது.
ஆனாலும் தங்களுடைய நாட்டின் நலனை மாத்திரம் வைத்துக் கொண்டு கடந்த காலங்களிலிருந்து இந்தியா செயற்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமை பேரவையில் இந்தியா செயற்பட்ட விதம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை, இந்தியா தங்களுடைய நலனையும் கருத்திற் கொள்வதோடு, எங்களுடைய மக்களின் நலனையும் கருத்திற் கொண்டு, ஒரு ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கொக்கட்டிச்சோலை படுகொலை
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தினைத்தை நினைவு கூர்ந்ததற்காக கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக தருமலிங்கம் சுரேஸ் இன்று முன்னிலையாகியிருந்தார்.
இதன் போதே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“வருடாந்தம் ஜனவரி மாதம் கொக்கட்டிச்சோலை படுகொலை தினம் கடைப்பிடிப்பது வழமையாகும்.
கிழக்கிலே நடந்தேறிய இனப்படுகொலைகளிலே கொக்கட்டிச்சோலைப் படுகொலை தினத்தை நாம் வருடாந்தம் நினைவுகூர்ந்து வருகின்றோம்.
அரசாங்கம் படுகொலை தினங்களை நினைவு கூருபவர்களை அச்சுறுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்களை மூடி மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற காத்திரமான செயற்பாடாகவுள்ளது.
தொடர்ச்சியாக மக்களை அடக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம்
கடந்த காலங்களிலே எமது மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் கிழக்கு மாகாணத்திலே உச்சக்கட்டமாக இருந்தது. மக்கள் தமது இறந்த உறவுகளை நேரில் சென்று நினைவேந்தல்களைச் செய்கின்ற போது, அவர்களை மிரட்டி அந்நிகழ்வுகளை அவர்களைச் செய்யவிடாது, தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
மீண்டும் எமது மண்ணில் இவ்வாறான படுகொலைகள் இடம்பெறக்கூடாது, தொடர்ந்தும் அடக்கு முறைகளும், இடம்பெறக்கூடாது என்பதற்காகவே நாம் இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்து வருகின்றோம்.
இவ்வாறான நினைவேந்தல்கள் ஊடகாக நாம் எமக்கு நடந்த சம்பவங்களை சர்வதேச சமூகத்திற்குத் தெரியப்படுத்தி வருகின்றோம். ஆனால் சர்வதேச சமூகம், கண்மூடித்தனமாக எமது மக்களுக்கு நடந்திருக்கின்ற இனப்படுகொலைகள் தொடர்பாக மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களைப் பாதுகாத்து வருகின்றது.
இந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட 51/1 பிரேரணை என்பது ஒரு வலுவற்ற பிரேரணையாகும். அதனால் எமது மக்களுக்கு எதுவித பிரஜோசனமுமில்லை.
இந்தியா தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும்
பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிமன்றிற்குக் கொண்டு சென்று சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் மூலம்தான் தமிழ் மக்கள் இந்த தீவிலே வாழ்வதற்கான நிம்மதியை ஏற்படுத்தலாம்.
இல்லையேல் இவ்வாறான அடக்குமுறைக்கள் தொடரும். எமக்கு பிடியாணையை ஏற்படுத்திவிட்டு எம்மைப் பயம் காட்டும் செயலில் அரசு இவ்வாறான செயலில் ஈடுபட்டு வருகின்றது.
இதனை சர்வதேச சமூகம் உற்றுநோக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இவ்விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது.
ஆனால் தங்களுடைய நாட்டின் நலனை மாத்திரம் வைத்துக் கொண்டு கடந்த காலங்களிலிருந்து இந்தியா செயற்பட்டு வருகின்றது. ஐ.நா.மனித உரிமை பேரவையில் இந்தியா செயற்பட்ட விதத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது” எனவும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.