அஹூங்கல்ல பகுதியில் நேற்றைய தினம் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது விசேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
காரில் வந்தவரால் துப்பாக்கிசூடு
நேற்றைய தினம் அஹூங்கல்ல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது காரில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தப்பிச் செல்வதற்கு முன்னர் காயமடைந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் சில நிமிடங்கள் பிரதான சாலையில் போராடி, பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பினார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் ஏழை மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
32 பேர் சுட்டுக்கொலை
2022 மே 31 முதல், இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வன்முறை கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 32 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.