இந்தியாவின் புதுச்சேரி மாநில கடற்றொழிலாளர்கள் மீது இலங்கையை சேர்ந்த இனம்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி, காரைக்கால் கடற்றொழிலாளர்கள் நேற்று இரவு நடுக்கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த ஏழு கடற்தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்றறொழிலுக்காக சென்றுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்
அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இலங்கையை சேர்ந்த படகு ஒன்று அவர்களை சுற்றிவளைத்துள்ளதுடன், இரும்பு கம்பிகள், மற்றும் வாள்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், படகிலிருந்து இரண்டு லட்சம் இந்திய ரூபா மதிப்பிலான மீன்கள், வலைகள், கையடக்க தொலைபேசிகள், திசைகாட்டும் கருவி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தாக்குதலுக்குள்ளான புதுச்சேரி கடற்தொழிலாளர்கள் 7 பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடல் கொள்ளையர்
இதேவேளை, இலங்கையைசேர்ந்த கடல் கொள்ளையர்களே தங்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி மாநில அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையென்றால் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் புதுச்சேரி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.