கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம்
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் நேற்று ஆரம்பகட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான பிரச்சினையை விரைவில் தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) சியம்பலாண்டுவ பிரதேச செயலக பிரிவில் ரத்துமட, வீரகந்தவல ஆகிய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பயிர்ச்செய்கைகளை நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அதிபர் இதனைத் தெரிவித்தார்.
உணவு வழங்கும் வேலைத்திட்டம்
மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி, பட்டினியில் சாகவே நேரிடும் என்று குறிப்பிட்ட அதிபர், நாடாளுமன்றத்தில் மாத்திரமே அரசியல் பேசப்பட வேண்டும் எனவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.