மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன பெரமுன மீண்டும் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
இந்த மறுமலர்ச்சிக்கான பிரசாரத்திற்கு ஒன்றுபட்டு எழுவோம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சிக்கான பத்துக் கூட்டங்களில் முதல் கூட்டம் களுத்துறையில் இடம்பெற்றுள்ள நிலையில் இரண்டாவது கூட்டம் கண்டியில் நடைபெற்றது.
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் புதிய மறுமலர்ச்சி திட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு பின்னால் இருந்து வியத்கம அமைப்பினர், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை செயற்படவிடவில்லை என்ற குற்றச்சாட்டு கூட்டத்தில் சுமத்தப்பட்டுள்ளாது.
ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியில் பங்கெடுக்கக்கூடாது என்று கோசம் எழுப்பப்பட்டிருந்தபோதும், தேசிய சபையின் துணைக்குழுவுக்கு நாமல் ராஜபக்சவை, பசில் ராஜபக்ச தலைவராக்கியிருக்கிறார்.
இது அவரை எதிர்கால ஜனாதிபதியாக்குவதற்கான அடித்தளம் என்றே கருதப்படுகிறது. இதேவேளை வெளிநாட்டில் அடைக்கலம் பெற முடியாமல் போனதால், கொழும்புக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மலலசேகர மாவத்தையில் உள்ள அவரது வீட்டில், அடிக்கடி மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கோட்டாபயவின் அடுத்த நகர்வு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.