திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு பாலவாக்கத்திலுள்ள கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு நோக்கிய அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் வகிபங்கு, அதற்காக தமிழக மற்றும் இந்திய மத்திய அரசுடனான பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள், தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாட வேண்டியதன் தேவைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவர்
இதேவேளை, கே.எஸ்.இராதாகிருஷ்ணன் நீண்ட நெடிய தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலத்திலிருந்து தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காலம் வரை ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர்.
மேலும் ஈழ விடுதலைப் போர் மெளனிக்கப்பட்ட பின்னரும் கூட, எமது மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலாகவே இருந்து வருகின்றார் என்று இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.