வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 81 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த 100 நாள் செயல் முனைவின் 81ம் நாள் போராட்டத்தில் ஓலைத்தொடுவாய் பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை, இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.
மத வழிபாடு எங்கள் சுதந்திரம்
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும், 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே” என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.