நுகர்வோர் கொள்வனவு செய்யும் பாணில் மோசடி இடம்பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிக விலைக்கு பாண் விற்கப்படுகின்ற போதிலும், மக்களுக்கு சரியான நிறை மற்றும் தரமான பாண் கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளிலும் பாண் விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையங்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நாட்டில் அதிக மக்களின் உணவாக காணப்படும் பாணின் நிறை 450 கிராம் ஆக இருக்க வேண்டும். ஆனால் அதிக விலை கொடுத்தாலும் வாடிக்கையாளருக்கு குறைந்தபட்சம் 450 கிராம் நிறையுள்ள பாண் கிடைப்பதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு
சந்தையில் தரமற்ற பாண் விற்பனை செய்யப்படுவதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் தற்போது பாணின் நிறை 300, 305, 314, 330 மற்றும் 370 கிராம் என பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1864 ஆம் ஆண்டின் 13 ஆம் எண் பாண் கட்டளை சட்டத்தின் படி, விற்பனைக்கான பாணின் நிறை குறிப்பிட்ட நிறையை கொண்டிருக்க வேண்டும்.
அதன்படி, 225, 450, 900 மற்றும் 1,800 கிராம் என்ற அடிப்படையில் நிறை இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.