30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினிக்கு 10வது முறையாக பரோல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
வீட்டை சுற்றி காவல்துறை பாதுகாப்பு
பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உள்ள வீட்டில் தங்கி தனது தாயாரை கவனித்து வருகிறார். அவர் தினமும் காட்பாடி காவல் நிலையத்துக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவர் தங்கி உள்ள வீட்டை சுற்றி பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒன்பது முறை நளினிக்கு பரோல் நீடிக்கப்பட்டிருந்தது. ஒக்டோபர் 25ஆம் திகதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
மீண்டும் நீடிக்கப்பட்ட பரோல்
இந்த நிலையில் மீண்டும் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது. தாயின் உடல் நிலையை காரணம் காட்டி மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு 10ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.