
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான காவல்துறை பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் இனிவரும் காலங்களில் விசாரணைக்கு எடுப்பதில்லை என கூறி வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு இன்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி வழக்கு விசாரணைக்காக கடந்த தவணையில் எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கடந்த தவணையின் போது வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
முடிவுறுத்த தீர்மானம்
இதற்கமைய ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி மன்றிற்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்பட்ட ஆவணங்கள் இன்று கல்முனை மேல் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து குறித்த வழக்கு தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் இதுவரை நடைபெற்ற விசாரணைகள் யாவையும் முடிவுறுத்த இறுதி தீர்மானம் மன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல்
அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான காவல்துறை பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது
சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் அம்பாறை காவல்துறை பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.